அருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஜோர்ஹாட்டில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் பிற்பகல் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால், மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்தனர்.
இந்த நில அதிர்வு அசாமிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
இந்தியாவிலேயே, மேகாலயா, நாகாலந்து, சிக்கிம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்தான் நில நடுக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இயற்கை பேரழிவுகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக தப்பிக்க நவீன இயந்திர கருவிகளை உருவாக்க ஜியாலஜிஸ்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில், இதேபோல வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மணிப்பூரில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.