ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவில் இருந்து கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் முஜ்கண்ட் பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 5 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.
தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், என்கவுண்டர் நடந்த அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டது.
கடும் துப்பாக்கி சண்டையின் முடிவில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை.
பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . அதே சமயம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, பாதுகாப்பு படையினர் 8 பேர் உயிர் இழந்துள்ளதாவும் 216 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.