ராகிங் கொடுமையால் ரயில் முன் பாய்ந்து பொறியியல் மாணவர் தற்கொலை... சிக்கிய உருக்கமான கடிதம்
ஐதராபாத் : ராகிங் கொடுமை தாளாமல் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள சி.எம்.ஆர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் சாய்நாத் வத்லகொண்டா. இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். சீனியர் மாணவர்களின் கொடுமை தாங்காமல் மனமுடைந்த சாய்நாத் தான் அனுபவித்த கொடுமையை கடிதமாக எழுதினார்.
இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள காசிபேட்டில் ரயில் முன் பாய்ந்து மாணவர் சாய்நாத் தற்கொலை செய்துகொண்டார்.
தனது கடிதத்தில் அவர் இனி ராகிங்கில் யாரும் ஈடுபட வேண்டாம் என உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானாவில் கடந்த 6 வாரத்தில் நடைபெறும் 3-வது ராகிங் தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.