வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வாங்க.. காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் திடீர் கோரிக்கை
தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
டெல்லி: தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் நிலவுகிறது என்றும் நாட்டில் பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க குடியரசுத் தலைவரின் தலையீடு உடனடியாக தேவை என பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் தற்போதுள்ள முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
நாட்டில் ஒரு வித பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழும் எதிர்ப்பு குரல்கள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்ததாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மேலும் பசு பாதுகப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் குலாம் நபி ஆசார் கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதால் வாக்குச்சீட்டு முறையை அமல் படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளித்துள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.