அந்த ஒரு நோட்டீஸ்.. அடுத்தடுத்த அவமானம், ஏமாற்றம்.. திடீரென பொங்கி எழுந்த சச்சின்.. என்ன நடந்தது?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக பொங்கி இருக்கிறார். அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் திடீரென இப்படி புரட்சி செய்ய நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் ஜோதிராதித்ய சிந்தியாவின் புரட்சி காரணமாக அங்கு மொத்தமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அதே நிலைமை ராஜஸ்தானிலும் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு பின் பாஜக இருக்கிறது, ஆபரேஷன் கமலா, அமித் ஷாவின் ராஜதந்திரம் என்று நிறைய சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியும், அதன் உச்சபட்ச தலைவர்களும்தான் காரணம்.
109 எம்எல்ஏக்கள் சப்போர்ட்.. ராஜஸ்தானில் ஆட்சி கவிழாது.. அதிகாலை 2.30 மணிக்கு காங். அளித்த பேட்டி!
சச்சின் பைலட்
சச்சின் பைலட் மற்றும் அசோக் கெஹ்லட் இடையிலான மோதல் கடந்த வருடத்தில் இருந்தே இருக்கிறது. அப்போதே யாருக்கு முதல்வர் பதவி என்ற போட்டி நிலவியது. இதற்காக ஒரு வாரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. ராகுல் காந்தி மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி சீனியாரிட்டி அடிப்படையில் அசோக்கை ஆட்சியில் அமர வைத்தார். அப்போதே சச்சின் அதிர்ச்சியில்தான் இருந்தார்.
என்ன காரணம்
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற அசோக் கெஹ்லட்டை விட சச்சின் பைலட்தான் அதிக காரணம் என்று இப்போதும் ஒரு கருத்து நிலவுகிறது. சச்சின் பைலட் வகுத்த வியூகம்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. சச்சின் பைலட்தான் வருங்கால காங்கிரஸ் தேசிய தலைவர் என்றும் கூட கருத்துக்கள் வெளியானது. ஆனால் உண்மையில் அவருக்கு ராஜஸ்தானிலேயே கூட பெரிய அளவில் மதிப்பு இல்லாமல் போனது.
தொடர் அவமானம்
காங்கிரஸ் கட்சிக்குள் அவர் ராஜஸ்தானில் தொடர் அவமானங்களை சந்தித்தார் என்று கூறுகிறார்கள். அதாவது துணை முதல்வர் பதவி எல்லாம் வெறும் பேருக்குதான் அனுபவித்தார். ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. தொடர் அவமானங்களை சந்தித்தார். அதிகாரிகள், கட்சியினர் யாரும் அவர் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
பேச முயன்றார்
இது அவரை கடுப்பாக்கவே, இது தொடர்பாக தனது நண்பர் ராகுல் காந்தியிடம் பேச முயன்று இருக்கிறார். ஆனால் ராகுல் காந்தி எப்படி சிந்தியாவை சீண்டாமல் இருந்தாரோ அதேபோல் சச்சின் போன் காலையும் எடுக்கவில்லை என்கிறார்கள். சோனியாவும் கூட தனது விசுவாசி அசோக் கெஹ்லட்டிற்கு ஆதரவு கொடுத்தது போல சச்சின் பைலட்டிற்கு பேச்சுக்கு கூட ஆதரவு கொடுக்கவில்லை என்கிறார்கள்.
எழுந்த எதிர்ப்பு
இதை எல்லாம் பார்த்த சச்சின் பைலட் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்ய நினைத்து இருக்கிறார். அவர் பாஜகவில் இணைய திட்டமெல்லாம் போடவில்லை. ஆனால் ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும். தனக்கு வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இவர் பேசி வந்துள்ளார்.
என்ன கைது
இந்த நிலையில் ராஜஸ்தான் உளவுத்துறைக்கு இந்த தகவல் சென்றுள்ளது. இதற்கான தொலைபேசி ஆதாரங்கள் கூட முதல்வர் அசோக்கிற்கு சென்றுள்ளது.இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி ராஜஸ்தானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பரத் மலானி, அஸோக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
சச்சின் கோபம்
இது சச்சின் பைலட்டிற்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. அதோடு இது தொடர்பாக சச்சின் பைலட் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு அம்மாநில போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆம் முதல்வரின் கீழ் இயங்கும் போலீஸ் துணை முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி சட்ட பிரிவு 124(பி) மற்றும் 120 (பி), கீழ் சச்சின் பைலட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்எல்ஏக்களை வளைக்க முயன்றது தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
மொத்தமாக சீண்டியது
இதுதான் சச்சின் பைலட்டின் கோபத்தை சீண்டியது என்கிறார்கள். இதனால்தான் திடீரென்று சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். என்னால் இந்த அவமானத்தை தாங்க முடியாது. இருந்தால் மரியாதையோடு இருப்போம் . இல்லையெனில் ஆதரவாளர்களுடன் வெளியேறுவோம் என்று சச்சின் பைலட் முடிவு எடுத்துவிட்டார் என்கிறார்கள். இதில் பாஜகவின் பங்கை விட காங்கிரசின் பங்குதான் அதிகம் என்கிறார்கள்.