பறந்தடிக்கும் பாட்சா பாத்திருப்பீங்க.. பறக்கும் பீட்சா பாத்திருக்கீங்களா?
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பீட்சாவை குட்டி விமானத்தில் டெலிவரி செய்வதற்கான ஒப்புதலை பெற ஒரு நிறுவனம் முயற்சித்து வருகிறது.
லக்னோ: தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பீட்சாவை குட்டி விமானத்தின் மூலம் டெலிவரி செய்வதற்கான வேலைகளில் ஒரு ஆன்லைன் உணவு பொருள் விற்கும் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு கடைக்கு சென்றால் பையுடன் சென்றுவந்தோம். மேலும் மாதத் தொடக்கத்தில் மளிகை சாமான் வாங்கும்போது இரு சக்கர வாகனங்கள் இல்லாதவர்கள் ஆட்டோவை அமர்த்திக் கொண்டு வாங்கிவந்தனர்.
இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பொருள்களைத் தவிர்த்து பெரும்பாலாக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள், உணவு பொருள்கள் உள்ளிட்டவை நம் வீடு தேடி டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
இரு சக்கர வாகனங்களில் ...
மேற்கண்ட பொருட்கள் இரு சக்கர வாகனங்கள் மூலம் டோர் டெலிவரி செய்யப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், காற்று மாசுக்கு மத்தியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் டெலிவரி பாய்கள் உள்ளனர். மேலும் உணவு பொருள்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதை தாமதப்படுத்தக் கூடாது என்பதால் டெலிவரி பாய்கள் ஆளாய் பறப்பர்.
விமானம் மூலம் பீட்சா
போக்குவரத்து நெரிசல், நேரம் அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்க உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல ஆன்லைன் உணவு பொருள்கள் விற்பனையகம் ஒன்று பீட்சாக்களை குட்டி விமானங்கள் மூலம் டெல்வரி செய்ய முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த கடையின் விற்பனை மேலாளர் குமார் கூறுகையில், தற்போது லக்னோவில் உள்ள போக்குவரத்து நெருக்கடி மிகவும் மோசமாக உள்ளது. எனவே குட்டி விமானங்களை பயன்படுத்தி பீட்சா டெலிவரி செய்தால் தற்போது ஆகும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரம் மிச்சமாகும். இரு சக்கர வாகனங்களால் காற்று மாசுப்படுவதும் தடுக்கப்படும்.
ஓராண்டாக தயாரிப்பு
விமானம் மூலம் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வருகிறோம். அதற்காக அதிகாரிகளின் ஒப்புதலை பெற காத்திருக்கிறோம். விமானம் மூலம் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்குமாறு லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதேபோல் விமான போக்குவரத்து அமைச்சகமும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
டிரோன் வீடியோ
இது எப்படி சாத்தியம் என்பது குறித்து செயல்முறை விளக்கம் மகாநகரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி காண்பிக்கப்பட்டது என்றார் அவர். முதல்முறையாக மும்பையில் பீட்சாவை விமானம் மூலம் டெலிவரி தற்போது செய்துவருகின்றனர். ஒரு வேளை அந்த அனுமதி கிடைத்துவிட்டால் வட இந்தியாவில் விமானம் மூலம் டோர் டெலிவரி செய்யும் முசல் நிறுவனமாகவும், ஒட்டுமொத்த இந்தியாவில் மும்பைக்கு அடுத்தாற்போல் இரண்டாவது நிறுவனமாகவும் விளங்கும். பீட்சா வேண்டுமென்றால் இனி வாசற்கதவை பார்ப்பதற்கு பதில் விட்டத்தை பார்க்க வேண்டியது நிலை விரைவில் எல்லா இடங்களிலும் வரக்கூடும்.