குண்டு வைத்திருக்கிறோம்.. சிறிது நேரத்தில் வெடித்துவிடும்..தாஜ்மஹாலுக்கு மிரட்டல்!
தாஜ்மஹாலில் குண்டு வைத்திருக்கிறோம், சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று நேற்று இரவு சிலர் லக்னோ போலீசுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
லக்னோ: தாஜ்மஹாலில் குண்டு வைத்திருக்கிறோம், சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று நேற்று இரவு சிலர் லக்னோ போலீசுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று இரவு சரியாக 9.40க்கு இந்த கால் வந்தது.
போனில் பேசிய மர்ம நபர்கள் தாஜ்மஹாலுக்குள் சில இடங்களில் குண்டு வைத்திருக்கிறோம் அது இன்னும் சில மணி நேரத்தில் வெடித்துவிடும் என்று கூறியிருக்கின்றனர். மேலும் அதை உங்களால் செயலிழக்க செய்ய முடியாது என்றும் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து தாஜ்மஹால் முழுக்க போலீஸ் தீவிர சோதனை நடத்தியது. தாஜ்மஹாலில் திடீர் என்று நடத்தப்பட்ட இந்த சோதனையால் அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தேடுதல் வேட்டை இரவு முழுக்க நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இருந்து நீக்கம்
உ.பி.யில் புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு சில வாரங்களுக்கு முன் தாஜ்மாஹாலை அவர்களது சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்த தாஜ்மஹால் நீக்கப்பட்டது. தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால் , தாஜ் மஹால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் நேற்று தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று இரவு சரியாக 9.40 க்கு எண் 100க்கு தொடர்பு கொண்டவர்களின் கால் லக்னோ காவல் நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருக்கிறது. அப்போது அந்தக் காலில் சில மர்ம நபர்கள் ''தாஜ்மஹாலுக்கு இன்று மாலை நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அங்கு பாம் வைத்தோம். அது இன்று இரவில் வெடித்துவிடும்''. என்று கூறியிருக்கின்றார். மேலும் ''எவ்வளவு முயன்றாலும் அதை உங்களால் செயலிழக்க செய்ய முடியாது'' என்றும் கூறியிருக்கின்றனர்.
தாஜ்மஹால் முழுக்க சோதனை
இதையடுத்து நேற்று தாஜ்மஹாலில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று 9.50க்கு ஆரம்பித்த சோதனை இரவு முழுக்க நடந்தது. நிறைய போலீசாரும், வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் நிபுணர்களும் இந்தத் தேடுதலில் ஈடுபட்டனர். தாஜமஹாலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதால் இந்த தேடுதல் பணி மிகவும் சிரமமானதாக இருந்தது. தாஜ்மஹாலில் திடீர் என்று நடத்தப்பட்ட இந்த சோதனையால் அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொய்யான வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் இரவு முழுக்க தேடியும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து லக்னோ காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் பொய்யானது என போலீசார் முடிவுக்கு வந்தனர். இது குறித்து லக்னோ போலீஸ் ராஜா சிங் பேசுகையில் "இந்த மிரட்டல் பொய்யானது. தாஜ்மஹாலின் அனைத்து பகுதிகளிலும் தேடிவிட்டோம், சந்தேகபடக் கூடிய வகையில் சிறிய பொருளைக் கூட இதுவரை பார்க்கவில்லை. இருந்தாலும் தாஜ்மாஹாலுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் முடிவில் இருக்கிறோம்" என்று கூறினார்.