இந்தி படத்திற்கு குத்துப்பாட்டு எழுதும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் பாலிவுட் படம் ஒன்றுக்காக குத்துபாடல் எழுதுகிறார்.
பாலிவுட்டும் குத்துப்பாட்டும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட முன்னணி நடிகைகள் கூட போட்டா போட்டி போடுகிறார்கள் என்றால் அதன் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிச் செல்கிறார்கள் நடிகைகள். பாலிவுட் என்ன கோலிவுட்டிலும் குத்தாட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
கபில் சிபல்
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பிரனவ் சிங் முசாபர்நகர் கலவரத்தை மையமாக வைத்து இயக்கும் பாலிவுட் படத்திற்காக குத்துப்பாடல் ஒன்றை எழுதுகிறார். கபில் சிபல் பாலிவுட் படத்திற்கு பாடல் எழுதுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
காதல் பாட்டு
முன்னதாக சிபல் பந்தூக் என்ற படத்திற்காக து ஜல்தி பதா தே என்ற காதல் பாடலை எழுதியுள்ளார். பிரனவ் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், சஞ்சய் சூரி நடித்துள்ள படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்ல அதில் உள்ள 5 பாடல்களையும் அவர் தான் எழுதியுள்ளார்.
ஆர்வம்
நான் கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவது ஆர்வத்தால் தானே தவிர பணத்திற்காக அல்ல. என் சட்டப் பணி மூலம் எனக்கு போதிய அளவு பணம் கிடைக்கிறது. முதலில் ஆங்கிலத்தில் கவிதை எழுதினேன். ஆனால் ஆங்கிலத்தை விட இந்தியில் கவிதை எழுதினால் பலர் படிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இதையடுத்து இந்தியில் கவிதை எழுதுவதுடன் படத்திற்கு பாடல்களும் எழுதுகிறேன் என்கிறார் சிபல்.
குத்துப்பாட்டு
தற்போது குத்தாட்டம் என்பது படத்தின் முக்கியமான பாகம் ஆகிவிட்டது. இயக்குனர் என்னிடம் குத்துப்பாட்டு எழுதுமாறு கேட்டபோது என்னால் முடியாது என்று கூற முடியவில்லை. ஒரு நண்பர் வந்து கோர்ட் வழக்கில் உதவுமாறு கேட்பது போன்று இருந்ததால் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்று சிபல் கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
2014ம் ஆண்டில் கபில் சிபல் எழுதிய பாடல்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரவ்னக் இசை ஆல்பம் வெளியானது. அந்த ஆல்பத்தில் வரும் 7 பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான், பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஸ்ரேயா கோஷல், பாடகர் மோஹித் சவுகான் உள்ளிட்டோர் பாடியிருந்தனர்.