வார்தா புயலால் அந்தமானில் சிக்கிய 2,376 சுற்றுலா பயணிகள்.. பாதுகாப்பு படையினர் மீட்டனர்
வார்தா புயல் எதிரொலியாக அந்தமான் தீவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 2 ஆயிரத்து 376 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
போர்ட் பிளேயர்: வார்தா புயல் எதிரொலியாக நெயில், ஹாவ்லாக் தீவுகளில் இருந்து வெளிநாட்டவர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 376 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி உருவான வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் யுனியன் பிரதேச தீவுகளில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்தமான் நிக்கோபர் யுனியன் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:
சுமார் 2 ஆயிரத்து 376 சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் 7 கப்பல்களும், 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மீட்புப் பணியில் அந்தமான் நிர்வாகம், கடற்படையினர்,கப்பல் படையினர், விமானப் படையினர் இணைந்து செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் 2 ஆயிரத்து 376 பேர் மீட்கப்பட்டதில் ஜெர்மன் நாட்டவர்கள் 2 பேர், 4 ஸ்பெயினியர்கள், சிரியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 வெளிநாட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நெயில், ஹாவ்லாக் தீவுகளில் இருந்து மீட்கப்பட்டு போர்ட் பிளேயர் கொண்டுவரப்பட்டனர் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை காரணமாக எந்தவிதமான உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அந்தமான் துணை நிலை ஆளுநர் ஜெகதீஷ் முகி தெரிவித்துள்ளார். வானிலை நிலவரம் சரியான பிறகு வெள்ளிக்கிழமை மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த யுனியன் பிரதேச நிர்வாகம் கேட்டுக் கொண்ட இருதினங்களில் மீட்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய கப்பல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.