ஆந்திராவில் பரபரப்பு.. கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்.. மூன்று நாள்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..
அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை ஆந்திர போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மண்டபேட்டா நகரைச் சேர்ந்த 4வயது சிறுவன் ஜஷீத். இவன் தனது வீட்டின் முன்பு திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சிறுவன் ஜஷீத்தை கடத்திச்சென்றார். இதை பார்த்து சிறுவனின் பாட்டி பார்வதம்மா கூச்சலிட்டார். எனினும் அவர்கள் குழந்தையுடன் தப்பிவிட்டனர்.
போலீசுக்கு தகவல்
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆந்திர மாநில போலீசார், மாயமான குழந்தையை மீட்க 17 தனிப்படையை அமைத்து தேடினர்.
கிராமத்தில் விட்டுவிட்டு ஓட்டம்
ஆந்திரா மாநிலம் முழுவதும் சிறுவன் ஜஷீத்தை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து பயந்து போன கடத்தல்காரர்கள் குழந்தையை ராயவரம் அருகே குடுகுருலு என்ற கிராமத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
போலீசார் மீட்டனர்
இதனிடையே சிறுவன் ஜஷீத் தெருவில் தனியாக அழுது கொண்டிருப்பதை அப்பகுதியில் இருப்பவர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் குழந்தை ஐஷீத்தை மீட்டு மண்டபேட்டா காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு பெற்றோரிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்தியது ஏன்
குழந்தையை கடத்திச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஏன் குழந்தையை கடத்தினார்கள் என்பதற்கான காரணங்களும் கடத்தல்காரர்கள் பிடிபட்டால் தான் தெரிய வரும் என கிழக்கு கோதாவரி போலீசார் தெரிவித்தனர்.