சிந்துவுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் போட்டி போட்டு பரிசுத் தொகை அறிவிப்பு!!
விஜயவாடா: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு ஆந்திரா மாநில அரசு ரூ3 கோடி பரிசு, வீடு, அரசு பணி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசு ரூ 5 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிந்துவுக்கு மத்திய பிரதேச அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. ஹைதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் ஒரு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி அரசு ரூ.2 கோடியை அவருக்கு பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பி.வி. சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையும், ஹைதராபாத்தில் ஆயிரம் சதுரடியில் ஒரு வீட்டு மனை மற்றும் குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தெலுங்கானா அரசு ரூ5 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக போட்டி போட்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே சிந்து, ஆந்திராவின் மகளா? தெலுங்கானாவின் குடிமகளா? என்ற பஞ்சாயத்து நடக்கும் நிலையில் இரு மாநில அரசுகளும் போட்டி போட்டு பரிசுத் தொகையை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.