சிறப்பு அந்தஸ்து- ஆந்திராவில் பந்த்! வெறிச்சோடிய வீதிகள்- கடைகள் அடைப்பு- தமிழக பேருந்துகள் ரத்து!!
விஜயவாடா: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது. இதனால் அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் கோரிக்கை.
ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது. இருப்பினும் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். இது ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா கொந்தளிப்பு
தற்போது மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஆந்திராவில் நேற்று போராட்டம் வெடித்தது. மறியல்-ஆர்ப்பாட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர்.
முழு அடைப்பு
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் பொது மக்களிடம் ஆதரவு கேட்டார்.
வீட்டுக் காவலில் தலைவர்கள்..
எதிர்க்கட்சிகளின் பந்த் போராட்டம் அறிவிப்பால் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் வீடுகளுக்கு சென்று நீங்கள் வெளியே சென்றால் கைது செய்வோம் என்று கதவில் நோட்டீஸ் ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைப்பு
ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகள் தானாக முன் வந்து கடைகளை அடைத்தனர்.
வெறிச்சோடிய கடப்பா
கடப்பா மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பேருந்துகள் குறைவு
பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. ஆனாலும் 75% பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய போராட்டத்தால் ஆந்திரா ஸ்தம்பித்தது.