ரூ.5000 கோடி 'அடேங்கப்பா' கடன் மோசடி வழக்கு… ஆந்திர வங்கி முன்னாள் இயக்குனர் கைது
ஐயாயிரம் கோடி மோசடி வழக்கில் ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குனர் அனுப் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: ஐயாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் வங்கிக்கடன் பெற உதவி செய்ததாக ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதில், குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் மேற்படி நிறுவனம் செலுத்தவில்லை என்றும் இதற்கு உடந்தையாக ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குனர் செயல்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ரூ.5,383 கோடி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடன் பெற உதவி செய்த ககான் தவான் என்பவர் அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஹவாலா மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் அளித்த தகவலின்படி அனுப் பிரகாஷ் கார்க் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.