குடும்ப பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் வட்டி கும்பல்.. நீதி விசாரணைக்கு ஆந்திர கேபினட் பரிந்துரை
விஜயவாடா: ஆந்திராவை ஒரு பரபரப்புச் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. அதீத வட்டிக்குப் பணம் கொடுத்து அதைக் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் ரீதியாக சீரழித்து வரும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றசாட்டின் பேரில் இதுவரை 80 பேர் கைதாகியுள்ளனர்.
"கால் மனி" மோசடி என்று கூறப்படும் இந்த அக்கிரமச் செயலால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாம். பெரிய பெரிய தாதா கும்பல்கள், அரசியல்வாதிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர் என பல தரப்பினரும் இதில் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.
இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு மெத்தனமாக இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதி விசாரணைக்கு, சந்திரபாபு நாயுடு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதியை கொண்டு இந்த விசாரணை நடைபெறும். கடன், வசூல் பற்றி மட்டுமின்றி, குடும்ப பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளி பணம் பறித்த சம்பவங்களையும் சேர்த்தே விசாரிக்க கேபினெட் அனுமதித்துள்ளது.