ஆந்திராவில் சட்ட மேலவை கலைப்பு- ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிரடி!
அமராவதி: ஆந்திராவில் சட்ட மேலவையை கலைப்பதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
ஆந்திரா முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்பதை மாற்றினார்.
ஆந்திராவின் சட்டசபை அமராவதியிலும் நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினத்திலும் நீதித்துறை தலைநகர் கர்னூலிலும் இருக்கும் என சட்டத்தை நிறைவேற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக ஆந்திராவின் சட்ட மேலவையை கலைக்க ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று முடிவை எடுத்தது. இதுவும் ஆந்திரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
2018-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் 23 இடங்களில்தான் வென்றது.
ஆந்திரா சட்ட மேலவையில் மொத்தம் 58 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தெலுங்குதேசம் கட்சிக்கு 26 பேரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 9 பேரும்தான் உள்ளனர். பாஜகவின் 3 எம்.எல்.சிக்களும் மேலவையில் உள்ளனர். தற்போது 4 எம்.எல்.சி. இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த மேலவையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னமும் பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியதிருக்கும்.
இதனால் ஆந்திரா சட்டசபையில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிறைவேற்றும் சட்டங்கள் மேலவையில் முடங்கிக் கிடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகையால் மேலவையையே கலைப்பது என அதிரடியாக முடிவெடுத்துவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் 1983-ல் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்குதேசம் 1985-ல் சட்ட மேலவையை கலைத்தது. 2007-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.