நான் வேண்டாம்... பென்ஷன், ரோடு மட்டும் வேணுமா? - சந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை
என்னுடைய அரசு பிடிக்கவில்லையென்றால் சாலைகளை பயன்படுத்தக்கூடாது பென்ஷன் வாங்கக் கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
கர்னூல்: எனது அரசைப் பிடிக்காதவர்கள் பென்ஷன் வாங்காமல், சாலைகளை பயன்படுத்தாமல் இருங்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது.
கர்னூல் மாவட்டம் நந்தியால் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் அவர் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனது அரசு அளிக்கும் பென்ஷனை பெற்றுக் கொள்கிறீர்கள், எனது அரசால் அமைக்கப்பட்ட திட்டங்களை அனுபவிக்கிறீர்கள் ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போட மாட்டீர்களா? இது எப்படி நியாயமாகும்? உங்களுக்கு எனது அரசை பிடிக்கவில்லை என்றால், எனது அரசு தரும் பலன்களையும் அனுபவிக்கக் கூடாது என்று அதிரடியாக பேசினார்.
பலன்கள் மட்டும் வேண்டுமா?
எனது அரசை பிடிக்காது என்று சொல்பவர்கள் எனது அரசு தரும் பென்ஷனை வேண்டாம் என்று சொல்லுங்கள். எனது அரசு அக்கறையுடன் போட்ட சாலைகளை பயன்படுத்தாதீர்கள் என்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார் சந்திரபாபு நாயுடு.
கடன் தள்ளுபடி
எனது அரசு ரூ.1.50 லட்சம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. முதியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு பென்ஷனை ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளது.
காசுக்கு ஓட்டு
நான் பல நலத்திட்டங்களை அளித்து வருகிறேன், ஆனால் அரசியல்வாதிகள் தரும் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள். வெறும் ரூ.500, ரூ.1000 எப்படி உங்களது எதிர்காலத்தை மாற்றும்?
ஊழல் அரசியல்
ஓட்டுக்கு பணம் வாங்குவது தப்பில்லை என்று ஒரு சில தலைவர்கள் பேசி வருகின்றனர். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் நான் அது போன்ற ஊழல் அரசியலை செய்ய அனுமதிக்க மாட்டேன்.
விமர்சனம்
ஆந்திர மக்களுக்கான முதல்வராக இருக்க வேண்டிய சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு எதிராக பேசியுள்ள பேச்சுகளை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. சந்திரபாபு நாயுடு பொது விழா மேடையில் பேசிய பேச்சு ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.