ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்
அமராவதி: கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள இல்லத்தை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வார காலமே கெடு விதித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கைகளை கண்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பீதியடைந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிரட்சி காட்டுகிறார் ஜெகன்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்
வாடகை பங்களா
குண்டூர் மாவட்டம் உண்டஹள்ளியில் கிருஷ்ணா நதிக்கரையோரம் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை பங்களாவில் குடியிருந்து வருகிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அந்த பங்களாவில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வீடு ஆற்றுப்படுகையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி ஆந்திர அரசு அதை இடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
நோட்டீஸ்
சந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் லிங்கமணி ரமேஷுக்கு ஆந்திர மாநில வளர்ச்சி குழும ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கிருஷ்ணா நதியை ஆக்கிரமித்து பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலமுறை தெரிவித்தும் உங்கள் வீட்டில் சந்திரபாபு நாயுடு குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரம் கெடு
வீட்டை சந்திரபாபு நாயுடு ஒரு வாரத்தில் காலி செய்துகொள்ள வேண்டும் எனக் கெடு விதித்துள்ள அந்த ஆணையம், இல்லையென்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் முதல்வருக்கே இந்த நிலையா என்கிற வகையில் ஆந்திர அரசியலில் இது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
30 வீடுகளுக்கு நோட்டீஸ்
சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது போல், அந்தப் பகுதியில் உள்ள மேலும் 30 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.