கொரோனாவை குணப்படுத்த காய்ச்சல் மாத்திரை போதும்... ஜெகன்மோகன் ரெட்டி கூல் பேட்டி
அமராவதி: கொரோனோ வைரஸ் பாதிப்பை குணப்படுத்த காய்ச்சலை குணப்படுத்தும் சாதாரண பாராசிட்டமல் மாத்திரைகள் போதுமானது என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஜெகன்மோகன் ரெட்டி அளித்த கூல் பேட்டிக்கு ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெகன்மோகனின் பேச்சை புறந்தள்ளி கொரோனோவில் தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் பீதி
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் நோய்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் ஈரான், இத்தாலி, என பல நாடுகளில் உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளன. கொரோனோவை உலகமே அச்சத்துடன் எதிர்கொண்டு வரும் நிலையில், கொரோனோவால் ஆரோக்கியமாக உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையே இது அதிகம் தாக்கி வருவதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மாத்திரை
மேலும், கொரோனோ வைரஸ் பாதிப்பை சரிசெய்ய பாரசிட்டமல் மாத்திரைகள் போதுமானது என ஜெகன் தெரிவித்திருப்பது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே யாரும் அஞ்சி நடுங்கத் தேவையில்லை என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனோ பாதிப்பு ஏற்படும் எனவும் ஜெகன் தெரிவித்துள்ளார். மக்களை பதற்றத்தில் இருந்து வெளிக்கொண்டு வரும் வகையில் ஜெகன் தெரிவித்த கருத்து ஆந்திர எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடு
பொறுப்புள்ள முதல்வர் பதவியில் இருந்துகொண்டு ஜெகன் அலட்சியமாக பேசியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார். மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் பேச்சை புறந்தள்ளி மக்கள் கொரோனோவில் இருந்து தங்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம் அளித்த அறிவுறுத்தல் படி நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் பேச்சு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை தருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ரத்து
கொரோனோ வைரஸ் தொற்றை காரணம்காட்டி ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் கோபத்தை அளித்திருக்கிறது. ஆந்திர மாநில தேர்தல் ஆணையத்தில் தற்போது ஆணையராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் ஆவார். இவர் ஜெகன் ஆட்சிக்கு வந்ததும் அவருடன் இணக்கமாக இருந்ததால் அவரை மாற்றுவதற்கு ஜெகன் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் திடீரென இப்போது ஆந்திர உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னணியில் சந்திரபாபு நாயுடு இருப்பதாக உணர்கிறாராம் ஜெகன்.
கொரோனோவை பூதாகரமாக்கி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ததால், அதே கொரோனோவை மையமாக வைத்து அது ஒன்றும் பெரிய நோய் இல்லை என்ற ரீதியில் ஜெகன் கூல் பேட்டி அளித்திருக்கிறார்.