கடவுள் ஆசிர்வாதத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்... ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி விருப்பம்!!
விஜயவாடா: ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டியை மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். அப்போது குங்கும பொட்டுடன் ஸ்டாலின் பேசியது ஆச்சரியத்தை தந்தது.
இதனிடையே, விழாவில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "கடவுள் ஆசிர்வாதத்துடன் ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்," என்று தனது விருப்பத்தை கூறினார். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்ரெட்டியின் இந்த பேச்சு, தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் நோக்கர்களையும் ஜெகன்மோகன் ரெட்டியின் நகர்வுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 10 ஆண்டுகால முயற்சியில் ஆந்திராவின் முதல்வராக இன்ற அரியணை ஏறி உள்ளார். ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அங்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.