தெலுங்கானா விவகாரம்: இன்று பதவியை ராஜினாமா செய்கிறாரா ஆந்திர முதல்வர்?
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க அம்மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அடுத்தகட்ட முடிவு எடுப்பது தொடர்பாக சீமாந்திரா எம்.பி.க்களுடன் கிரண் குமார் ரெட்டி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக கிரண் குமார் ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்யக்கூடும் என்று மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே சமயம் ரெட்டி புதிய கட்சி துவங்குவார் என்றும் இல்லை என்றால் அவரது ஆதரவாளர்களின் கட்சி ஒன்றில் சேர்வார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கானா தனிமாநிலமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தனது பதவியை ராஜினாமா செய்வது ஒரு வகையான போராட்டம் தான் என்று கிரண் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் தான் அரசியலை விட்டே வெளியேறிவிடுவேன் என்று ரெட்டி கடந்த மாதம் 30ம் தேதி தெரிவித்திருந்தார். அதன் பிறகு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் மத்திய அரசை தாக்கிப் பேசினாரே தவிர தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவது எப்பொழுது என்பதை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.