“ஆந்திர மக்களின் வாயில் மண்ணை போட்டு, தலையில் தண்ணீர் தெளித்து விட்ட மோடி”: காங். குற்றச்சாட்டு
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநில புதிய தலைநகர் அமராவதி நகரத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் கொண்டு வரப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், புனித நதியாகக் கருதப்படும் கங்கை நதியின் நீரையும் கொண்டு வந்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தார்.
விழாவில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அது பற்றிய எந்த அறிவிப்பையும் பிரதமர் வெளியிடவில்லை.
இதனால் ஆந்திர மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரின் கொடும்பாவியையும் எரித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ‘‘ஆந்திர மக்களின் வாயில் மண்ணை போட்டு, தலையில் தண்ணீர் தெளித்து விட்டார்'' என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி கூறும்போது, மகாத்மா காந்தி உப்பு சத்தியாகரம் நடத்தி நாட்டுக்கு எப்படி சுதந்திரம் பெற்று தந்தாரோ, அதேபோல ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க ‘‘மண் சத்தியாகிரக'' போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தார்.
அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண், தண்ணீர் எடுத்து பிரதமருக்கு தபாலில் அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையொட்டி, முதல் கட்டமாக ரகுவீரா ரெட்டி தனது சொந்த கிராமமான அனந்தபுரத்தில் உள்ள நீலகண்டாபுரத்தில் இருந்து தண்ணீர், மண்ணை சேகரித்து பிரதர் மோடிக்கு தபாலில் அனுப்பி வைத்தார். அதில் விளக்க கடிதத்தையும் இணைத்து இருந்தார்.
மேலும் கோவிந்தபுரம், கங்குல வாயிபாளையம் ஆகிய கிராமத்தில் இருந்தும் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் கொண்டு வந்த மண் மற்றும் தண்ணீரும் அனுப்பி வைக்கப்பட்டது.