'விஷ்ணு' விவகாரம்: டோணிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் வாபஸ்!!
அனந்தபூர்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோணியை விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்ட விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை ஆந்திராவின் அனந்தபூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் வேடத்தில் டோணி இருப்பது போன்ற அட்டைப்படம், பிசினஸ் டுடே வார இதழில் 2013-ஆம் ஆண்டு வெளியானது.
இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஆந்திராவின் அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஷியாம் சுந்தர் இவ்வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் டோணிக்கு அனந்தபூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை அண்மையில் பிறப்பித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான விசாரணை அனந்தபூர் நீதிமன்றத்தில் நீதிபதி கீதவாணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அப்போது டோணியின் சாரில் ஆஜரான வழக்கறிஞர்கள், டோணிக்கு எதிராக அனுப்பப்பட்ட வாரண்ட் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
டோணிக்கு ஆதரவாக தாமாக முன்வந்து ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் ரெட்டி, இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் டோணி தற்போது விளையாடி வருகிறார் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டோணிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.