சூப்பர் விஷயத்துக்காக.. தெலுங்கு படத்தில் நடிகையாக மாறி நடித்துவரும் ஆந்திர துணை முதல்வர்
அமராவதி: ஆந்திராவின் துணை முதல்வர் பி. புஷ்பா ஸ்ரீவாணி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் டீச்சர் வேடத்தில் நடித்து வருகிறார்.
ஆந்திராவின் துணை முதல்வர் பி. புஷ்பா ஸ்ரீவாணி ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் பழங்குடி நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணி தற்போது "அம்ருதா பூமி" என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்து வருகிறார்.
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தை பருக்ருதி ஆதி தேவா பாவா புரொடக்சன் தயாரித்து வருகிறது. ஏபி ஆனந்த் என்பவர் "அம்ருதா பூமி" படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விசாகநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா என்ற கிராமத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணியுடன் விசாகநகரம் மாவட்ட கலெக்டர் ஹரிஜவஹர்லால் கலந்து கொண்டார்.
"அம்ருதா பூமி" படத்தில் ஆசிரியை வேடத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் பி. புஷ்பா ஸ்ரீவாணி, மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்றார்.
நல்ல விஷயத்திற்காக களம் இறங்கி உள்ள துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணியை ஆந்திர மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.