செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழ் நடிகரைக் கைது செய்துள்ளோம்... ஆந்திர டிஜிபி
ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சி. சரவணன் என்பவரைக் கைது செய்திருப்பதாக இன்று ஆந்திர மாநில காவல்துறை முறைப்படி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
செம்மரக் கட்டைகள் கடத்தியதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாகப் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத் தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சரவணனின் வங்கிக் கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார் அவர்.