ஆந்திரா என்கவுன்ட்டர்: 6 தமிழர்களின் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இன்று தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களில் 6 பேரின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர்.
தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தான் சுட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால் இது திட்டமிட்ட படுகொலை என்று சமூக ஆர்வலர்கள், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் 20 பேரை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன், முருகன், சசிக்குமார், பெருமாள் ஆகியோரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் முனியம்மாள் என்பவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, முனுசாமி உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த 6 பேரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு கடந்த 18ம் தேதி திருவண்ணாமலை வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அந்த 6 பேரின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்தது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.