வீட்டுக்காவலிலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு.. பேரணி செல்ல முயற்சி.. கேட்டை மூடி தடுத்த போலீஸ்
Recommended Video
அமராவதி: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரலோகேஷ் உள்ளிட்டோரை ஜெகன்மோகன் ரெட்டி அரசு வீட்டுக் காவலில் வைத்தது. இந்த நிலையில் வீட்டுக்காவலிலிருந்து பேரணி நடைபெறும் இடத்துக்கு புறப்பட்ட போது அவரது வீட்டு கேட்டை மூடி போலீஸார் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பொறுப்பை ஏற்றது முதல் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் கீழ்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரை ஆளும் கட்சியினர் குறிவைத்து தாக்குவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்நாடு பகுதியில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவத்தில் அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் சொந்த ஊரில் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஊர்களில் இருந்து வெளியேறினர்.
வெளியேறியவர்கள்
ஆளுங்கட்சியின் அராஜகம் காரணமாக சொந்த ஊர்களில் இருந்து வெளியேறிய கட்சி தொண்டர்கள் தங்குவதற்காக குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சியினர் முகாம் அமைத்தனர். ஆந்திராவில் உள்ள பல்நாடு மற்றும் குண்டூர் சமீபத்தில் இருக்கும் அச்சம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து இது போன்ற காரணங்களுக்காக வெளியேறியவர்கள் அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பலனில்லை
முகாமில் தங்கியிருந்த தெலுங்குதேசம் கட்சியினரை சமாதானம் செய்து ஊர்களுக்கு அழைத்து செல்ல போலீசார் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இதுபோன்ற செயல்களுக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய பலன் கிடைக்கவில்லை.
சந்திரபாபு நாயுடு
இந்த நிலையில் தன்னுடைய கட்சியினரை ஆளும் கட்சியினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபடுவது பற்றி நீதி கேட்டு குண்டூர் இருக்கும் ஆத்மகூருக்கு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் இன்று ஊர்வலமாக செல்ல தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருந்தார்.
கைது
இந்த நிலையில் இன்று காலை உண்டவல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு வந்த, தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள்,தொண்டர்கள் ஆகியோரை வழிமறித்த போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு
சலோ ஆத்மகூர் என்ற பெயரில் ஆத்மகூருக்கு ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவருடைய மகன் முன்னாள் அமைச்சர் நரலோகேஷ் ஆகியோர் இருந்து வெளியேற தடை விதித்த போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
144 தடை உத்தரவு
தகவலறிந்த சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு வந்த தொண்டர்களையும் ஆந்திர போலீஸ் கைது செய்தது. நரசராவ்பேட்டா, சட்டானப்பள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் டெலி கான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆளும் கட்சியின் போக்கை கண்டித்து கண்டித்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தான் வீட்டிற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தடுத்து நிறுத்திய போலீஸ்
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, போலீஸ் காவலை மீறி பேரணிக்கு புறப்பட தயாரானார். ஆனால் அவரது வீட்டு கேட்டை மூடிய போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.