ஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி அறிவித்துள்ளார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் இருந்த போது இலவசமாக மணல் அள்ளலாம் என உத்தரவிடப்பட்டு இருந்ததது.
ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சி இருருந்த போது எடுத்த பல முடிவுகளை புதிதாக வந்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் முழுவதும் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக மணல் எடுத்து செல்லலாம் என முந்தைய தெலுங்குதேசம் அரசு அறிவித்து இருந்தது. இதனால் மிகப்பெரிய அளவில்மணல் முறைகேடு ஆந்திராவில் நடைபெற்றது. இது தொடர்பான விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டார். மேலும் ஆந்திராவில் மணல் அள்ளவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதுபற்றி சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி நேற்று துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் இன்று முதல் மணல் எடுக்கும் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இனி (நேற்று) ஆந்திர மாநிலம் முழுவதும் மணல் எடுக்க உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. எந்த இடத்திலாவது மணல் எடுத்தால் அல்லது மணலை கடத்தி கொண்டு செல்ல முயன்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். மணலைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய அந்தந்த மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஜூலை 1ம் தேதி முதல் மணல் எடுப்பதற்கான புதிய பாலிசி திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. சுரங்க துறையின் மூலமாக கடந்தாண்டு ரூ2643 கோடி மட்டுமே வருவாய் வந்தது. மணல் விற்பனையை இலவசமாக அறிவிக்கப்பட்டதால் அரசுக்கு எந்தவித வருவாயும் வரவில்லை. இதனால் தனிப்பட்ட நபர்களே லாபம் அடைந்துள்ளனர். ஊழலற்ற முறையில் மணலை அரசே விற்பனை செய்யும். இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் புதிய பாலிசி திட்டம் கொண்டு வரப்படும்" இவ்வாறு கூறினார்.