ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் அனைத்து அரசு வேலைகளுக்கும் நேர்முக தேர்வை ரத்து செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இனி பணியிடங்களுக்கான ஆட்கள் சேர்க்கை நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற 100 நாளில் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம், மதுக்கடைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைத்து அதை அரசே ஏற்று நடத்தும் திட்டம், விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம், ஆட்டோ,கால் டாக்ஸி ஒட்டுனர்களுக்கு நிதியுதவி திட்டம், கல்வி உதவி தொகை திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
எழுத்து தேர்வு
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் 2020ம் ஆண்டு முதல் அனைத்து அரசு வேலைகளுக்கும் நேர்முக தேர்வை கிடையாது என ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இனி ஆந்திர மாநிலத்தில் அரசு பணிகளுக்கு வைக்கப்படும் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
மதிப்பெண் அடிப்படை
இந்த தகவலை ஆந்திர மாநில அரசு பணிகள் தேர்வு வாரிய செயலாளர் பிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு கூறுகையில் "வரும் 2020 ஜனவரி 1ம்தேதி முதல் அரசின் அனைத்து பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது (இன்ட்ர்வியூ கிடையாது), தேர்வர்கள் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.
முதல்வர் ஜெகன்
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது முதல்வர் ஜெகன், அதிகாரிகளுடன் 2020ம் ஆண்டுக்கான ஆந்திரமாநில அரசு பணி தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடுவது குறித்து ஆலோசித்தார். அதில் இடம் பெற வேண்டிய பணியிடங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளார். விரைவில் தேர்வுகள் விவரம் வெளியிடப்படும் என தெரிகிறது.
வாய்ப்பு இல்லை
ஆந்திர அரசு பணிகளின் தேர்வுகள் பெரும்பாலும் நீதிமன்றத்தில் வழக்குகளில் சிக்கி வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல்களை தவிர்க்கவே நேர்முக தேர்வை ரத்து செய்யும் முடிவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி வந்துள்ளார். அவரது இந்த முடிவினால் சமானியர்களும் எளிதில் உயர் பதவியில் சேர வாய்ப்பு உள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.