ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு
Recommended Video
சென்னை: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. அக்கோடபர் 1ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது.
இதன் மூலம் 10 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இப்போது உள்ள மதுக்கடைகளை 20 சதவீதம் குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.
ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி படிப்படியாக ஆந்திராவில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றார். அதன்படி ஆட்சிக்கு வந்த உடன், கிராமங்களில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்யும் பெல்ட் ஷாப்புகளை மூட உத்தரவிட்டார். மேலும் மதுவிற்பனை தொடர்பாக உள்ள மாநிலத்தில் உள்ள விதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி ஆந்திராவில் 4377 தனியார் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த உரிமத்தை செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது . இதன்பின்னர் அக்டோபர் 1ம் தேதி முதல் அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்த போகிறது. இப்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் மதுக்கடைகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல் 3504 மதுக்கடைகள் ஆந்திராவில் அரசு சார்பில் செயல்படப்போகிறதாம்.
மது விற்பனை செய்யும் பணிக்காக 10 ஆயிரத்து 500 பேரை வேலைக்கு எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. நகர்புறங்களில் 4 பணியாளர்கள், கிராமப்புற கடைகளில் 3 விற்பனையார்கள் விகிதம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளார்கள்.மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மது விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முறைகேடாக செயல்படுவதை தடுக்க முடியும் என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாம். ஆண்டுக்கு ஆந்திராவில் 20 ஆயிரம் கோடிக்கு மதுவிற்பனை நடந்து வருவதால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மதுவிற்பனை மூலம் அரசின் வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளார்.