20 தமிழர் படுகொலை- மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆந்திரா ஹைகோர்ட் இடைக்கால தடை!
ஹைதராபாத்: ஆந்திரா அரசால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருப்பதி சேசாஷலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஆந்திரா போலீசாரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரைத்தது. அத்துடன் வரும் 9-ந் தேதியன்று ஆந்திரா தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆந்திரா அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், இது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணைக்கு ஜூலை 3-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.