வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ
நந்தியால்: கடன் தொகையை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதி எம்.பி-யான எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டில் தான் சிபிஐ ரெய்டு நடந்துள்ளது.
நந்தியால் தொகுதி எம்பி எஸ்.பி.ஒய்.ரெட்டி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
பின்னர் இவர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தில் இவர் நந்தி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் பிவிசி பைப், சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில்கள் உள்ளிட்டவற்றை செய்கிறார். மேலும் நந்தி குரூப் ஆஃப் கம்பெனியின் பெயரில் எஸ்பிஐ மற்றும் சிண்டிகெட் வங்கிகளில் இவர் மொத்தமாக ரூ500 கோடி கடன் பெற்றுள்ளார்.
ஆனால் இந்த கடன் தொகையை அவர் சரிவர திரும்ப செலுத்தவில்லை என வங்கிகள் புகார் தெரிவித்தன. வங்கிகளின் புகாரையடுத்து எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டினில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சோதனை நடைபெற்ற போது எம்பி ரெட்டி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரெய்டின் போது எம்பியின் மருமகன் வீட்டில் இருந்துள்ளார்.
சோதனை குறித்து அவர் கூறுகையில், வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் எங்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் ரூ.14 ஆயிரம் பணம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது என்றார்.