ஆந்திர எம்பிகள் தொடர் அமளி... நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைப்பு!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி எம்பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி எம்பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி மார்ச் 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த கூட்டத்தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்றம் தொடங்கியது முதலே பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய நீரவ் மோடி விவகாரம், ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்பிகளின் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிகள் போராட்டம் என நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தெலுங்குதேசம் கட்சி வெளியேறியுள்ளது.
இதே போன்று அதிமுக எம்பிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். எம்பிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் லோக்சபா முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் சபை மீண்டும் கூடிய போது அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போன்று ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு சபைகளும் மீண்டும் மார்ச் 19 அதாவது திங்கட்கிழமை கூடுகிறது.