ஆந்திராவில் கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழா: சிறுவன் பலி, 65 பேர் காயம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தசரா விழாவை ஒட்டி நடைபெற்ற கட்டையால் அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் 65 பேரின் மண்டை உடைந்தது. நெரிசலில் சிக்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் உள்ளது மல்லேஸ்வர சாமி கோயில். ஆந்திர - கர்நாடக எல்லையில் உள்ள இக்கோயிலுக்கு இருமாநில பக்தர்கள் வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், தசாரா விழாவை ஒட்டி இக்கோயிலில் கல்யாண உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இப்பழக்கம் கிருஷ்ண தேவராயர் காலம் முதற்கொண்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில், இந்தாண்டு தசரா விழாவில் கல்யாண உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அப்போது இரு கோஷ்டியினரும் கட்டைகளால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் தீவிரமாக தாக்கி கொண்டனர். இதையடுத்து பிரச்சினையை கட்டுப்படுத்த காவல் துறையினர் முயன்றனர். ஆனால் பக்தர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், நேரானிகினி கிராமத்தை சேர்ந்த லிங்காயத்தி மஹேஷ் என்ற 11 வயது சிறுவன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த கலவரத்தில் 65 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் ஆதோனி, கர்னூல் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.