ஆந்திராவில் விஸ்வரூபமாகும் கோவில்கள் சேதம்- தடுமாறும் தெலுங்கு தேசம்- அசால்ட்டாக தட்டிதூக்கும்பாஜக
அமராவதி: ஆந்திராவில் தற்போது நடந்துவரும் இந்து கோவில்கள் சேதம் தொடர்பான விவகாரம் கால்பதிக்கவே முடியாதோ என இலவு காத்து கிடந்த பாரதிய ஜனதாவுக்கு மிகப் பெரிய அளவுக்கு அரசியல் ஆதாயத்தை அள்ளித்தரப் போகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா தவிர தமிழகம், தெலுங்கானா, கேரளா, ஆந்திராவில் பாஜக கால் வைக்கவே பெரும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. கேரளா, தமிழ்நாட்டில் எத்தனையோ முயற்சிகளை பாஜக மேற்கொண்ட போதும் மக்கள் தொடர்ச்சியாக அந்த கட்சியை நிராகரித்தே வருகின்றனர்.
தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ், காங்கிரஸ், ஓவைசி கட்சிகள்தான் என்கிற நிலையை மாற்றி டி.ஆர்.எஸ்., பாஜக, ஓவைசி கட்சி என்கிற புதிய அத்தியாயம் அண்மையில் நடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மூலம் உருவாகி உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வாக்கு வங்கி அப்படியே பாஜக பக்கம் போய்விட்டதாகவே கருதப்படுகிறது.
சிக்கன் ரைஸ் விவகாரம்- அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் போடவா? சென்னையை அலறவிட்ட பாஜக பிரமுகர்- வைரல் வீடியோ
ஆந்திராவில் பாஜக
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கூட்டணியில் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தது. 2014 சட்டசபை தேர்தலில் பாஜக-தெலுங்குதேசம் கூட்டணி அமைத்த போது பாஜகவால் 4 இடங்களில் வெல்ல முடிந்தது. மேலும் லோக்சபா தேர்தலிலும் 2 இடங்களைப் பெற முடிந்தது. ஆனால் தெலுங்குதேசம் கூட்டணியை முறித்த நிலையில் 2019 சட்டசபை தேர்தலில் பாஜக வசம் இருந்த 3% வாக்கு சதவீதமானது 0.84% என்கிற அதள பாதாளத்துக்குப் போனது. இது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட குறைவு.
பாஜக ஆதரவு நிலைப்பாடு
ஆந்திராவைப் பொறுத்தவரையில் தெலுங்குதேசம், ஆளும் ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா மூன்றுதான் பிரதான கட்சிகள். இந்த மூன்றுமே பாஜகவுக்கு பரமவிரோதி என்று எப்போதும் சொல்லிவிட முடியாத அளவுக்குதான் இருக்கின்றன. 2019 லோக்சபா தேர்தலில் பாஜக அபரிதமான வெற்றியை நாடு முழுவதும் பெற்ற நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு தாவ தொடங்கினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறிய போது அந்த இடத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிரப்பும் என பேச்சு எழுந்தது. தொடக்கத்தில் இடதுசாரிகளுடன் இணக்கமாக இருந்த பவன் கல்யாண் இப்போது பாஜகவுக்கு பகிரங்கமான ஆதரவு முகமாகிவிட்டார்.
இனி தனித்தே ஆட்டம்
இதனால் பாஜகவுக்கான வாசல் என்பது ஆந்திராவில் திறக்கப்பட்ட ஒன்றுதான் என்கிற நிலை உருவாகி இருந்தது. அதாவது 3 கட்சிகளில் ஏதாவது ஒன்றின் முதுகில் அமர்ந்து சொகுசு பயணம் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்தது பாஜக. ஆனால் தற்போது இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுகிறது என்கிற விவகாரம் பாஜகவின் சோலோ ஆட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்பது மிகையில்லை.
ஜெகன் மோகன் ரெட்டி
என்னதான் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு-நேரடியாக ஆதரவு என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஊசலாட்டமான நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர் மீது கிறிஸ்தவர் என்கிற முத்திரையை ஆழமாக குத்துகிறார் சந்திரபாபு நாயுடு; அவர் கிறிஸ்தவராக இருப்பதால்தான் ஆந்திராவில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார் சந்திரபாபு நாயுடு. இதற்கு ஆக்கப்பூர்வமான பதிலாக கோவில்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதில் லாவணி கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அதேபோல் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் ஆந்திரா, பாகிஸ்தானைப் போல மாறிவிட்டது என பாஜகவின் முகமான பவன் கல்யாண் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த கோதாவில்தான் இப்போது பாஜகவும் களமிறங்குகிறது. பாஜகவுக்கே உரித்தான இந்து கோவில்களைப் பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பதி இடைத்தேர்தல்
பாஜகவைப் பொறுத்தவரையில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மூலமாக தெலுங்கானாவில் ஆட்டம் ஆடியதைப் போல ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள திருப்பதி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலைப் பார்க்கிறது. இந்துக்களின் புனித தலமான திருப்பதியை உள்ளடக்கிய லோக்சபா தேர்தலில் வென்று ஆந்திராவிலும் நாங்கள் ஆழமாக கால்பதித்துவிட்டோம் என்பதை பிரகடனம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக. இதனால் இனிவரும் நாட்கள் ஆந்திரா அரசியலில் மதம் சார் முழக்கங்கள் தகிக்கவே செய்யும்.