திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் கும்பல் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச்சூடு
திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் கும்பல் மீது ஆந்திர போலீஸார் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
திருப்பதி: ஆந்திரமாநிலம் திருப்பதி அருகே செம்மரங்களை கடத்திய கும்பல் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதனால் கடத்தல்காரர்கள் வெட்டிவந்த செம்மரங்களை விட்டுச் சென்றனர்.
ஆந்திர வனப்பகுதிகளில் பெருமளவு வளர்ந்து இருக்கும் செம்மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க அம்மாநில அரசு செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையை அமைத்து உள்ளது.
இந்நிலையில், இன்று காலை சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு காட்டுப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று செம்மரங்களை வெட்டிக்கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் 50 பேர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தேவுடுகுடி பகுதியில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்த கொள்ளையர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த செம்மரக்கொள்ளையர்கள் காடுகளுக்குள் ஓடி தப்பினர்.
சம்பவ இடத்தில் இருந்து 36 செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும். காட்டுக்குள் ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.