ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை... ஆந்திராவில் போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை
Recommended Video
விஜயவாடா: ஆந்திராவில் தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை போலீசாருக்கு இன்று முதல் வாரவிடுமுறை வழங்கப்படும் என அம்மாநில டிஜிபி ரவிசங்கர் அய்யனார் கூறினார்.
ஆந்திர முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடியான விஷயங்களை செய்து அம்மாநில மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.அந்த வகையில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜயவாடாவில் நேற்று ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காவல்துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி கவுதம் சவாங் சிறப்பு கமிட்டி அமைக்க உத்தரவிட்டார். இந்த கமிட்டி 19 மாடல் விடுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளது.
இதில் அந்ததந்த பகுதிகளில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் கருத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை இன்று முதல் வாரவிடுமுறை நடைமுறைக்கு வருகிறது.
ஆந்திர காவல்துறையில் 12 ஆயிரத்து 300 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் 20 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். போலீசார் தொடர் அழுத்தத்தால் திடீர் மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, சர்க்கரை வியாதி உள்பட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஓய்வு அவசியம்"இவ்வாறு கூறினார்.