ஆந்திராவில் தெலுங்குதேசம் கை ஓங்குகிறது.. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 2வது இடம்தான்: கருத்து கணிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது சி.என்.என்.ஐ.பி.என் கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவான கருத்து கணிப்பை சி.என்.என்.ஐபின் - லோக்நிதி- தி வீக் இணைந்து வெளியிட்டு வருகிறது.
இக்கருத்து கணிப்பில் தமிழகத்தில் அதிமுக, மேற்குவங்கத்தில் திரிணாமுல், பீகாரில் பாஜக, ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் ஆகியவை அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. இதேபோல் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இந்த சர்வே.
தெலுங்குதேசத்துக்கு 13-19
ஆந்திராவில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 13 முதல் 19 இடங்களைக் கைப்பற்றுமாம். இந்த கட்சிக்கு 29% வாக்குகள் கிடைக்குமாம்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 9-15
இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறின. ஆனால் சி,.என்.என்.-ஐபிஎன் கருத்து கணிப்போ, 9 முதல் 15 இடங்களைத்தான் ஜெகன் கட்சி கைப்பற்றும் என்கிறது. அதாவது ஜெகன் கட்சிக்கு 21% வாக்குகள் கிடைக்குமாம்.
காங்கிரஸுக்கு 4-8
காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்களைப் பெறுமாம்.
டி.ஆர்.எஸ்க்கு பின்னடைவு
தெலுங்கானாவில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் கூட 4 முதல் 8 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.
பாஜகவுக்கு முட்டை
ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சி வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாதாம்.
தெலுங்கானாவில் காங்கிரஸ்- டி.ஆர்.எஸ்.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 35% வாக்குகளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு 34% வாக்குகளும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 10%தான் இங்கு ஆதரவு கிடைக்குமாம்.
சீமாந்திராவில் தெ.தேசம் - ஜெகன் கட்சி
சீமாந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு 39% ஆதரவும் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 33% ஆதரவும் கிடைக்குமாம்.
காங்- பாஜகவுக்கு 7%
சீமாந்திராவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தலா 7% வாக்குகள்தான் கிடைக்குமாம்.
கடலோர ஆந்திராவில் தெ.தேசம்
சீமாந்திராவின் கடலோர ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு 43% ஆதரவும் ராயலசீமாவில் 31% ஆதரவும் இருக்கிறதாம்.
ராயலசீமாவில் ஜெகன் ராஜ்ஜியம்
ஆனால் ராயலசீமாவில் ஜெகன் மோகன் கட்சிக்கு 41%ஆதரவும் கடலோர ஆந்திராவில் 29% ஆதரவும் இருக்கிறதாம்.
தெலுங்கானாவுக்கு ராவ் காரணம்
தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்கு சந்திரசேகர் ராவ், அவரது டி.ஆர்.எஸ் கட்சிதான் காரணம் என 37% கூறியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் மேலிடமே காரணம் என்று 21% கூறியிருக்கின்றனர்.
டி.ஆர்.எஸ்- காங் இணைப்பு பற்றி..
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை இணைக்காதது சரியான முடிவு என 27% பேரும் தவறானது என 23% பேரும் கூறியுள்ளனர்.
பாஜக- தெ.தேசம் கூட்டணிக்கு அமோக ஆதரவு
அதேபோல் தெலுங்குதேசம்- பாஜக கூட்டணிக்கு இரு கட்சி தொண்டர்களிடையேயும் நல்ல ஆதரவு இருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு.
மத்திய அரசின் செயல்பாடு
தெலுங்கானாவில் மத்திய அரசு செயல்பாடு அற்புதம் என்று 53% பேர் கூறியுள்ளனர். ஆனால் சீமாந்திராவிலோ 65% பேர் படுமோசம் என்று கூறியிருக்கின்றனர்.
தெலுங்கானாவில் மோடி- ராகுலுக்கு சம ஆதரவு
தெலுங்கானாவில் யார் பிரதமராக வேண்டும் என்ற கேள்விக்கு மோடிக்கும் ராகுலுக்கும் ஆதரவாக 21% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சீமாந்திராவில் மோடிக்கு மட்டுமே ஆதரவு
ஆனால் சீமாந்திரா மாநிலத்தில் நரேந்திர மோடிக்கு மட்டுமே 30% ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு 3% ஆதரவு என்று கூறியுள்ளனர்.