திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜன.1 புத்தாண்டு தரிசனம் ரத்து- ஆந்திரா அரசு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டு பண்டிகை, ஜனவரி 1ஆம் தேதிக்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டு பண்டிகை, ஜனவரி 1ஆம் தேதிக்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் அறிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுவது இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது. அதனால், அதைக் கொண்டாட வேண்டாம் என கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஆந்திர அரசு, அனைத்துப் பெரிய, சிறிய கோயில்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள், மேலாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியது.
உகாதி பண்டிகைதான் உலகம் முழுவதும் தெலுங்கிற்கான புத்தாண்டு ,அன்றுதான் பக்தர்கள் கோயில்களில் பிரார்த்தனை மற்றும் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உள்பட அனைத்துக் கோயில்களில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் கூறுகையில், "முதல்வரின் உத்தரவின்படி ஜனவரி 1ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட அதோடு தொடர்புடைய மற்ற கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பதிலாக உகாதி பண்டிகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.