பீர் நல்லது... கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
குறைந்த அளவு ஆல்கஹால் கலந்துள்ள பீர் உடம்புக்கு நல்லது என்று ஆர்வ மிகுதியில் கருத்துக் கூறி ஆந்திர மாநிலம் முழுக்க அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவஹர்.
ஹைதரபாத்: குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் மற்ற மதுபானங்களை விட உடலுக்கு நல்லது என ஆந்திர மாநில அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது பெரிய அளவுக்கு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில அரசு பீர் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் விற்கப்படும் மற்ற மதுபானங்களை விட குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடலுக்கு நல்லது என ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
பீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என தான் சொல்லவில்லை என்றும், மற்ற மதுபானங்களைவிட ஆல்கஹால் குறைந்த பீர் ஆரோக்கியமானது என்று தெரிவித்த ஜவஹர், குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பீர் உள்ளுரில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மதுகுடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது, குறைந்தபட்சம் ஆல்கஹால் கலக்கப்பட்ட மதுபானத்தை குடிக்க வைக்கவே இந்தக் கருத்தை தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அமைச்சருக்கு கண்டனங்கள் பெருகியுள்ளன.