'நாயுடு முதல் மது வரை ' ஜெ. பாணி அரசியல் செய்யும் ஜெகன்.. மதுக்கடைகள் விஷயத்தில் அதிரடி திட்டம்
Recommended Video
அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மதுக்கடை விவகாரத்தில் ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்துள்ளார். முதலில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் பின்னர் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, பல விஷயங்களில் ஜெயலலிதா பாணி அரசியலை கடைபிடித்து வருகிறார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக ஊழல் வழக்குகளை தூசி தட்டி அவரை நிலைகுலையச் செய்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் மதுக்கடைகள் விஷயத்தில் அதிரடியான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அதாவது தமிழகத்தில் ஜெயலலிதா செய்தது போல் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார். பின்னர் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த போகிறாராம்.
மதுக்கடைகள் அரசே நடத்தும்
ஆந்திராவில் தற்போது உள்ள 3,448 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த போகிறது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது பின்னர், காலை 11 மணி முதல் 7 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11500 பேருக்கு வேலைவாய்ப்பு
இதற்காக ஏ.பி.பிவரேஜஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. அதாங்க நம்மூர் டாஸ்மாக் போல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆந்திராவில் செயல்படும் 3,448 கடைகளையும் குத்தகைக்கு எடுத்து நடத்த உள்ளது. இந்த கடைகளுக்கு 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்களும் புதிதாக நியமிக்கப்பட உள்ளார்கள்.
காவலாளிகள் நியமனம்
இரவு நேரத்தில் மது விற்பனையைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மதுக்கடைக்கும் காவலாளிகள் நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் மது மீட்பு மையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மதுவால் பலர் உயிரிழப்பு
முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, சந்திரபாபு நாயுடு சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க தவறியதல் ஆந்திராவில் ஏராளமான மக்கள் மதுவால் உயிரிழப்பதாகவும் நான் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.
மதுக்கடைகள் குறைப்பு
இதன்படி ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்பபட்ட பல ஆயிரம் பெட்டிக்கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. அதன்பின்னர் மதுக்கடைகள் எண்ணிக்கை 3,448 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அந்த கடைகளை ஆந்திர அரசே ஏற்று நடத்த உள்ளது.