சுடுகாட்டில் கட்டிலை போட்டு தனியே தூங்கிய எம்எல்ஏ.. மக்களின் பேய் பயத்தை போக்க அதிரடி
சுடுகாட்டில் தனியே தூங்கிய எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Recommended Video
பாலகோல்: ஒரு எம்எல்ஏ என்றால் தன்னுடைய தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு கட்டிடம் கட்டி தருவார், நிதியோ, நலத்திட்டமோ, வேலைவாய்ப்புகளையோ தந்து உதவுவார். ஆனால் ஆந்திராவில் ஒரு எம்எல்ஏ மக்களுக்கு புது மாதிரியான உதவியை செய்துள்ளார். அது என்னன்னுதான் படியுங்களேன்.
பாலகோல் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ நிம்மல ராம நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர். அவருடைய தொகுதியில் உள்ள சுடுகாட்டை சீரமைக்கவும், புனரமைக்கவும், அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
ஆனால் நிதி ஒதுக்கியது முதல் அந்த பணி தொடங்கப்படவில்லை. தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. பணி முடங்கியதால் ஒருவர் முன்வந்து தான் அந்த பணியினை தாமே எடுத்து செய்வதாக ஒப்பந்தம் போட்டார்.
அப்போதும் வேலை நடக்கவில்லை. ஒருவரும் வேலைக்கு வரவும் இல்லை. எம்.எல்.ஏ.விலிருந்து ஒப்பந்ததாரர் வரை குழம்பி போய் விட்டார்கள். பிறகுதான் தெரியவந்தது, அந்த சுடுகாட்டில் பேய், பிசாசு உலாவுவதாகவும், அதனால்தான் அச்சப்பட்டு தொழிலாளர்கள் வரவில்லை என்றும் தெரிந்தது.
இதையடுத்து, எம்எல்ஏ ராமநாயுடு இதற்கு ஒரு முடிவெடுத்தார். நேற்று முன்தினம் இரவு நேராக சுடுகாட்டுக்கு தனியாக கிளம்பினார். கூடவே ஒரு கட்டிலையும் எடுத்துக் கொண்டார். சுடுகாட்டிலேயே உட்கார்ந்து இரவு சாப்பிட்டை முடித்து கொண்டார். பின்பு அங்கேயே விடிய விடிய தூங்க ஆரம்பித்துவிட்டார்.
காலையில் சுடுகாட்டிலிருந்து வந்த அவரது நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்கள், மற்றும் தொழிலாளர்களின் பேய், பிசாசு பயத்தை போக்கவே சுடுகாட்டில் தூங்கியதாக எம்எல்ஏ தெரிவித்தார். ஆனால் கொசுக்கடி மட்டும் தாங்கவே முடியலயாம்.
சுடுகாட்டில் தன்னந்தனியே தூங்கி, மக்களின் பயத்தை போக்கிய எம்எல்ஏவுக்கு தொகுதி மக்களிடமிருந்து மட்டுமல்லாமல் அம்மாநில பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம்.