"நான் யார் தெரியுமா.. எங்க அப்பா யாருன்னு தெரியுமா".. ரூல்ஸ் பேசிய எம்எல்ஏ மகன்.. உள்ளே வைத்த போலீஸ்
டிராபிக் ரூல்ஸ் மீறிய எம்எல்ஏ மகனை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
திருப்பதி: "நான் யார் தெரியுமா.. எங்க அப்பா யாருன்னு தெரியுமா" என்று டிராபிக் ரூல்ஸை மீறிவிட்டு, ரூல்ஸ் பேசிய எம்எல்ஏ மகனை, போலீசார் தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில எம்எல்ஏ சாமினேனி உதயபானு. இவரது மகன் பிரசாத், ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
மாதாப்பூர் மீனாட்சி டவர் அருகே சென்றபோது, சிக்னல், டிராபிக் என்று எதையும் பார்க்காமல் இஷ்டத்துக்கு காரை ஓட்டினார், ராங் சைடில் காரையும் சடாரென திருப்பினார்.
அங்கு பணியில் இருந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ரெட்டி இதை கவனித்தார். பின்னர் பிரசாத்தின் காரை வழிமறித்து நிறுத்தி இதை கண்டித்தார். இதனால் ஆவேசமடைந்த பிரசாத், "நான் யாரு தெரியுமா? எங்க அப்பா யாரு தெரியுமா? நான் எம்எல்ஏ மகன்... என் காரையே தடுக்கிறியா?" என்று கேட்டு இன்ஸ்பெக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டரை பிரசாத் தாக்கினார். இதை இன்ஸ்பெக்டர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஸ்டேஷனுக்கு வருமாறு சொன்னார். உடனே பிரசாத்தின் மனைவி, அம்மா, தங்கை ஆகியோரும் சண்டைக்கு வந்துவிட்டனர்.
இறுதியில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தை எல்லாம் கவனித்து கொண்டிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, அதை இணையத்திலும் போட்டுவிட்டார். "நான் யார் தெரியுமா.. எங்க அப்பா யார் தெரியுமா" என்று கேட்ட பிரசாத்தை, இப்போது உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.