தொடரும் செம்மரம் கடத்தல்.. ஆந்திராவில் 11 தமிழர்கள் கைது!
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான 1.58 டன் எடை கொண்ட செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட வனப்பகுதியில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. சர்வதேச சந்தையில் செம்மர கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால் சமூக விரோதிகள் செம்மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தி கோடி கணக்கில் பணம் சம்பாதித்த வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசும், செம்மரக் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், செம்மரம் கடத்துவது ஓய்ந்தபாடில்லை. செம்மர கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுவதாக ஆந்திர மாநில போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான தமிழர்கள் செம்மர கடத்தலில் ஈடுபட்டபோது ஆந்திர மாநில போலீசாரால் என்கவுண்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் தற்போது செம்மர கடத்தலில் ஈடுபட்ட 11 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொரதட்டூர் துரசானிப்பள்ளி அருகே பொரதட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணய்யா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.58 டன் எடை கொண்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 58 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு செம்மர கடத்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஒரு பொலிரோ ஜீப், 4 இருசக்கர வாகனங்கள், மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடாலி, ரம்பம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.