மதுபான கடையில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியர்கள்.. .ஆந்திராவில்
அமராவதி: ஆந்திராவில் மதுபான கடைகளில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஆசிரியர்களும் களம் இறக்கிவிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன.
மொத்தம் 40 நாட்களாக அனைத்து மதுபான கடைகளும் ஒரே நேரத்தில் மூடப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்தே பூரண மதுவிலக்கு எனும் நல்ல நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்
லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள் தளர்வு
இந்நிலையில் லாக்டவுன் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அத்துடன் பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனால் மாநிலங்கள் மூடியிருந்த மதுக்கடைகளை திறந்துவிட்டன. அவ்வளவுதான்.. குடிமகன்கள் வெறித்தனமாக மதுபான கடைகளில் குவிந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மதுபான கடையிலும் கடந்த காலங்களைவிட அமோகமாக மதுவிற்பனையாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு
தமிழகத்திலும் இன்றுமுதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு சரக்குகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதிதுத்துதான் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால் இந்த நிபந்தனைகள், சமூக விலகல் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் குடிமகன்கள் மதுகடைகள் முன்பு கும்மியடித்துக் கொண்டிருக்கின்றனர். போலீசாரும் விழிபிதுங்க வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆந்திராவில் அலப்பறை
இதனிடையே ஆந்திராவில் மதுபான கடைகள் முன்பாக திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து போலீசாருடன் இணைந்து குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்களும் களத்தில் இறங்க அரசு உத்தரவிடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் போலீசாருடன் இணைந்து ஆசிரியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் போராட்டம்
இந்த நடவடிக்கை ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. அரசின் செயலால் கொந்தளித்துப் போன ஆசிரியர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் ஆசிரியர்களை மதுகடை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருந்து விடுவித்து ஆந்திரா அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.