சங்கராந்தி பண்டிகைக்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஆந்திராவில் நடந்த சேவல் சண்டை!
ஆந்திரா: ஆந்திராவில் சங்கராந்தி விழாவை முன்னிட்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை பந்தையம் கட்டப்பட்டு சேவல் சண்டை நடத்தப்பட்டுகிறது. தமிழக ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை தடையில்லாமல் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை போல் ஆந்திராவில் சங்கராந்தி விழாவை யொட்டி சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் காகிநாடா, விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சேவல் சண்டை கலைக்கட்டியது.
சில இடங்களில் பொழுது போக்காக சேவல் சண்டை நடத்தப்பட்டாலும் பல பகுதிகளில் பல ஆயிரம் லட்சம் என பந்தையம் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்று நாட்கள் நடைபெறும் சங்கராந்தி விழாவை யொட்டி நடத்தப்படும் சேவல் சண்டைகளில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வரை பந்தையம் கட்டப்பட்டுள்ளதாக போட்டிகளில் பங்கேற்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
பந்தையம் கட்டி நடைபெறும் சண்டைகளில் பங்கேற்கும் சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்படுவதால் அவை ஒன்றை ஒன்று குத்திக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றனர்.
சேவல் சண்டைக்காக பந்தையம் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் கன்னாவரம் என்ற இடத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கார் ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது.
சேவல் சண்டைகளில் விதி மீறல்கள் இருந்தாலும் போலீசார் வேடிக்கை பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. காளைகள் துன்புறுத்த படுவதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சேவல்களின் உயிரையே பறிக்கும் சேவல் சண்டைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.
ஆனால் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.