நைட்டியுடன் யாராவது பட்ட பகலில் நடமாடினால்.. இப்படியும் ஒரு கிராமம்!
மேற்கு கோதாவரி, ஆந்திரா: வயசு பெண்கள் யாராவது பகலில் நைட்டி அணிந்து வந்தால் அவ்வளவுதான்.. உடனே அபராதம்.. இப்படி ஒரு கிராமம் ஆந்திராவில் உள்ளது.
மேற்கு கோதாவரியில் உள்ள தோகலபல்லே என்ற கிராமம்தான் அது. வயசு பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியில் நிற்பதும், கடைகளுக்கு போய்வருவதையும் அந்த கிராமத்து பெரிசுகளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
நைட்டி போடக்கூடாது
வயசு பெண் ஒருத்தர் நைட்டி போட்டு வெளியில் வந்து அவர்களின் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான்... எல்லா பெரிசுகளுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. அதனால் எல்லா வயதானவர்களும் 6 மாசத்துக்கு முன்னாடி ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தார்கள்.
நேரம் குறித்தார்கள்
"இப்படி இந்த பொண்ணுங்க நைட்டி போட்டுட்டு வெளியில வர்றது பிடிக்கவே இல்லை. இதுக்கு ஏதாவது முடிவு பண்ணணுமே" என்று எல்லாரும் சேர்ந்து யோசித்தார்கள். கடைசியில் ஒரு ஐடியா அவர்களுக்கு கிடைத்தது. அதன்படி, காலை 7 மணியிலிருந்து ராத்திரி 7 மணி வரை நைட்டி போடக்கூடாது என்ற முடிவினை எடுத்தார்கள்.
உளவு தகவல்
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தினார்கள். மீறி யாராவது பகலில் நைட்டி போட்டால் 2 ஆயிரம் ரூபாய் ஃபைன் என்று சொன்னார்கள். ஆனால் இது எல்லாத்தையும்விட சூப்பர், யாராவது பகலில் நைட்டி போட்டு உலாவினால் அதுகுறித்த "உளவு"த் தகவலை சொன்னால், அவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமாம்!!
ஸ்பீக்கர்
இப்படி ஒரு முடிவை எல்லா பெரியவங்களும் சேர்ந்து எடுத்து, அதை ஊர்முழுக்க சொல்வதற்காக ஒலிபெருக்கியையும் ரெடி பண்ணார்கள். பிறகு ஒரு வண்டியில் ஸ்பீக்கர் கட்டப்பட்டு, ஊரெல்லாம் இந்த தகவலை ஆள் வைத்து சொல்ல சொன்னார்கள். இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், உடல்நலம் குன்றியவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்காம். இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு 6 மாசமாகிறது.
கட்டுப்பட்ட மக்கள்
ஆனாலும் இந்த 6 மாதத்தில் ஒரு புகாரும் வரவில்லையாம், யாரும் அபராதமும் கட்டவில்லையாம். எல்லோருமே அந்த கிராமத்தில் பெரிசுகளின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடந்து வருகிறார்கள். இந்த விஷயம் உள்ளூர் மீடியாக்காரர்களுக்கு தெரிந்து கடைசியில் இந்த கிராமத்தின் முடிவே வைரலாகி விட்டது. ஆனாலும் ஒருத்தர் அணியும் ஆடைகளில் இப்படி கட்டுப்பாடு விதிப்பது தவறு என்றும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்