மாந்திரீகத்தால் எலுமிச்சை பழங்களை பறக்கவிட்டு புதையல் தேடிய மந்திரவாதிகள்.. பீதியில் உறைந்த மக்கள்
திருப்பதி அருகே புதையல் தேடி மந்திரவாதிகள் எலுமிச்சை பழங்களை மாந்திரீகம் மூலம் பறக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி: புதையல் தேடி மந்திரவாதிகள் எலுமிச்சை பழங்களை மாந்திரீகம் மூலம் பறக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையம் அடுத்த வெங்கடபுரம் கிராமத்தில் குன்றின் மீது பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில் பூமிக்கடியில் புதையல் இருப்பதாக நீண்ட ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது.
இதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது கோவிலை சுற்றியுள்ள இடங்களில் புதையலை தேடி வந்துள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
பறந்த எலுமிச்சை பழங்கள்
இந்த நிலையில் பட்டாபிராமன் ரெட்டி, ஓம் பிரகாஷ்ராஜ் ஆகிய இரண்டு மந்திரவாதிகள் புதையல் எடுப்பதற்காக எர்ரவாரிபாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர். 2 பேரும் புதையல் எடுப்பதற்காக ஸ்ரீசக்கரம் அமைத்து மாந்திரீகம் மூலம் எலுமிச்சை பழங்களை பறக்கவிட்டுள்ளனர்.
கிராம மக்கள் பீதி
மந்திரவாதிகளின் மாந்திரீக சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். அப்போது எந்த பிடிமானமும் இல்லாமல் எலுமிச்சை பழங்கள் அந்தரத்தில் பறப்பதை பார்த்த கிராம மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
உடன் இருந்தவர்கள் ஓட்டம்
இரண்டு மந்திரவாதிகளையும் சுற்றிவளைத்து பிடித்த கிராம மக்கள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் திரண்டதை கண்டவுடன் மந்திரவாதிகளுடன் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் முன்னிலையில்
ஒப்படைக்கப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் போலீசார் முன்னிலையில் ஸ்ரீசக்கரம் அமைத்து எலுமிச்சை பழங்களை பறக்கவிட்டுள்ளனர்.
கிராம மக்கள் கோரிக்கை
பட்டப்பகலில் புதையல் எடுப்பதாக கூறி மந்திரவாதிகள் எலுமிச்சை பழங்களை பறக்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. புதையலுக்காக இதுபோன்று நடத்தப்படும் செயல்களை போலீசாரும் வனத்துறையும் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.