ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு இந்திரா காந்தி அமைதி விருது
டெல்லி: 2013-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அறக்கட்டளை ஆண்டுதோறும் அமைதி, முன்னேற்றம், உலக ஒற்றுமைக்காக பாடுபடுவோரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான விருதுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் (வயது 59) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மன்மேகன் சிங் தலைமையிலான சர்வதேச குழு இவரைத் தேரந்தெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ஜெர்மனை பொருளாதார வளர்ச்சியடைய செய்தமைக்காக ஏஞ்செலா மெர்க்கலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சர்வதேச அணு சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்பராடய், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பிரேசில், லைபீரிய அதிபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.