மாணவிகளை மசாஜ் செய்ய வைத்ததால் ஆத்திரம்... பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பெற்றோர்கள்!
காளஹஸ்தி: ஆந்திராவில் மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சின்னதிப்பசமுத்திரம் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் டி.பிரபாகர் (45) என்பவர் மீது, அடிக்கடி லீவு போட்டு விடுவதாக மண்டல கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இது தொடர்பாக மண்டல கல்வி அதிகாரியான ஸ்ரீதேவி, பிரபாகரை அழைத்து கண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த பிரபாகர் வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுக்காமல் தனி அறையில் படுத்து ஓய்வெடுத்துள்ளார். அந்த சமயங்களில் அதே பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலரை அழைத்து தனது கை, கால்களை பிடித்து விடச் சொல்வது, உடலில் மஜாஜ் செய்யச் சொல்வது, சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கச் சொல்வது உள்ளிட்ட பல வேலைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது தொடர்பாக தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஆசிரியர் பிரபாகருக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவர்கள், ‘‘மாணவிகளை அறைக்கு வரவழைத்து தகாத வேலைகளை செய்ய சொல்கிறீர்களாமே? என கேட்டு பிரபாகரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டல கல்வி அதிகாரி ஸ்ரீதேவி, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை தயார் செய்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.