சஹாரா சுப்ரதாராயின் பரோல் ரத்து- சிறைக்கு அனுப்பியது சுப்ரீம்கோர்ட்- வருத்தம் தெரிவித்த கபில்சிபல்!
டெல்லி: சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு வழங்கப்பட்ட பரோலை உச்சநீதிமன்றம் அதிரடியாக செய்தது. இதையடுத்து சுப்ரதா ராய் உடனடியாக சிறையிலடைக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவை தலைமையிடமாக கொண்ட சஹாரா குழுமம் மேற்கு வங்கம், ஒடிஷா, அஸ்ஸாமில் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ25,000 கோடி மோசடி செய்தது என்பது புகார். இக் குழுமத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்த சுப்ரதா ராய், மக்களிடம் இருந்து வசூலித்த தொகையை கொண்டு இந்திய பொருளாதார அமலாக்கப் பிரிவு சட்டங்களை மீறிய வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்து வைத்தார் என்பதும் குற்றச்சாட்டு.
மேலும் சஹாரா நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த சுப்ரதா ராய் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்துகள் முடக்கம்
இந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சஹாரா நிறுவனத்துக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்தனர்.
பரோல்
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சுப்ரதா ராயின் தாயார் சபி ராய் லக்னோவில் கடந்த ஜூன் மாதம் காலமானார். இதனால் சுப்ரதா ராயை பரோலில் விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை புகார்
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சஹாரா நிறுவனம் சார்பில் 352 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. எஞ்சிய தொகையை பெறுவதற்காக சஹாரா நிறுவனம் ஏலத்துக்கு முன்வைத்துள்ள சொத்துகளில் அமலாக்கத்துறையினரால் ஏற்கனவே முடக்கப்பட்ட ஐந்து சொத்துகளும் அடங்கியுள்ளது என அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச்நீதிமன்றத்திடம் இன்று தெரிவித்தார்.
சிறைக்கு போங்க...
ஆனால் அமலாக்கத்துறையினரால் ஏற்கனவே முடக்கப்பட்ட சொத்துகளை விற்க நாங்கள் முன்வரவில்லை என சஹாரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், அமலாக்கத்துறையினரால் ஏற்கனவே முடக்கப்பட்ட சொத்துகளையும் விற்பனைக்கான பட்டியலில் இணைத்துள்ளதால் இந்த வழக்கில் நீங்கள் முறையாக ஒத்துழைக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, நீங்கள் சிறைக்கு போவது நல்லது என கோபமாக குறிப்பிட்டார்.
உடனே சிறையிலடைப்பு
மேலும் நீதிமன்றத்தின் கண்ணியத்துடன் சிலர் விளையாடுவதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சில வழக்கறிஞர்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி தாக்கூர், பரோலில் விடுவிக்கப்பட்ட அனைவரையும் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சஹாரா இயக்குனர்கள் சுபத்ரா ராய், அசோக் ராய் சவுத்ரி, ரவி ஷங்கர் தூபே ஆகியோர் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வருத்தம் தெரிவித்த கபில்சிபல்
இதனால் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சஹாரா குழுமத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்தார். சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கபில்சிபல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி
இதனை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், சுப்ரதா ராய் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய அனுமதித்தார். இருப்பினும் அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் வரை சுப்ரதா ராய் சிறையில்தான் இருக்க வேண்டும்.